தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label படித்து சுவைத்தது. Show all posts
Showing posts with label படித்து சுவைத்தது. Show all posts

09 July 2013

ஐன்ஸ்டீன் வீட்டு சாரதியும் மேதை தான்!

பிரபல விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீனுக்கு ஒரு நல்ல டிரைவர் அமைந்திருந்தான். அவர் தன் 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப் பற்றி சொற்பொழிவாற்ற எங்கு சென்றாலும், அவன் தான் கார் ஓட்டிச் செல்வான். அங்கு அவர் பேசுவதைத் தவறாமல் கேட்பான். இவ்வண்ணம் அவன் அதைக் கேட்டுக்கேட்டு, அவர் 'தியரி' யை நன்றாகப் புரிந்துகொண்டான். உலகில் இரண்டு மூன்று பேர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது
என்று பெயர் பெற்ற அந்த 'ரிலேட்டிவிட்டி தியரி' அவனுக்கு நல்ல மனப்பாடம் ஆகிவிட்டது. ஒரு நாள், "நீங்கள் போகவில்லை என்றால் நான் கூட உங்களுடைய இந்த தியரியைப் பற்றிப் பிரசங்கம் செய்துவிட்டு வந்துவிடுவேன்" என்று அவரிடமே கூறினான் அந்த டிரைவர். அவனது நம்பிக்கையை அறிந்து ஐன்ஸ்டீன் மிகவும் மெச்சினார். அடுத்த வாரத்திலேயே அவனுக்கு ஒரு சந்தர்ப்பமும் அளித்தார்.
"இந்த ஊரில் என்னை அவ்வளவாகத் தெரியாது. நான் காரிலேயே உட்கார்ந்து கொள்கிறேன். நீ போய் பேசிவிட்டு வா" என்று டிரைவரை அனுப்பினார் ஐன்ஸ்டீன். அது ஒரு மாபெரும் கூட்டம். பெரிய அறிவாளிகளும் கணித மேதைகளும் அங்கு நிரம்பி வழிந்தனர். அதைக்கண்டு டிரைவர் ஒன்றும் அச்சம் கொள்ளவில்லை. தங்கு தடையின்றி 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப்பற்றி கடகடவென்று இரண்டு மணி நேரம்
பிரசங்கம் செய்தான். ஆழ்ந்த நிசப்தத்தில் கட்டுண்டு அனைவரும் அதனைக் கவனமாகக் கேட்டனர். பிரசங்கம் முடிந்ததும் கரவொலி எழுப்பி தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தனர். டிரைவரும் மகிழ்ச்சி கொண்டான். அப்பொழுது இரண்டொருவர் அருகில் வந்து, "மிஸ்டர் ஐன்ஸ்டீன்! உங்கள் தியரியில் ஒரு சின்ன சந்தேகம்" என்று அதை விவரித்து, "விளக்கம் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.
அவனுக்கு என்ன விளக்கம் சொல்லத் தெரியும்? இருந்தும் சிறிதும் அஞ்சினானில்லை. அந்த டிரைவர், "புரபசர்! நீங்கள் கேட்பது மிகவும் சுலபமான சந்தேகம். என் கார் டிரைவர் கூட பதில் சொல்லிவிடுவான்" என்று விடுவிடுவென்று காருக்கு வந்தான். காரிலிருந்த ஐன்ஸ்டீனிடம் விஷயத்தை விளக்கினான். உடனே அவர் புன்சிரிப்புடன் காரிலிருந்து இறங்கி, நேரே மண்டபத்தினுள் சென்றார்.
அனைவரையும் மீண்டும் அமரச்சொல்லி அந்த புரபஸரின் சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். அவருடைய அந்த டிரைவருடைய பேச்சுக்கும் (ஐன்ஸ்டீனின்) அமோக வரவேற்பு கிடைத்தது.
நன்றி:தினகரன்

27 January 2013

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.... நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ- பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார். உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. பஸ் ஆல்ட்ரின் வாழ்க்கைக் குறிப்பு!!!!!!!!! பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார். அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார்.ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன்சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21(இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.